Description
“திராவிட பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கே.எஸ். சலம் அவர்ளின் இந்த நூல் இந்திய வரலாற்றைப் பற்றிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விகள் போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் அல்ல. ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கும் கேள்விகள். சிந்து சமவெளி நாகரிகம் அழிக்கப்பட்டதா? உற்பத்தி முறை முரண்பாடுகள் அதற்கு காரணமா? மேய்ச்சல் சமூகங்களுக்கு புல்வெளிகள் வளரவேண்டி, நீர் தங்கு தடையின்றி பாய்தல் வேண்டும். விவசாய சமூகங்களுக்கு நீர் தேக்கம் அவசியம். ஆகவே, மேய்ச்சல் சமூகங்களின் நாயகன் இந்திரன் வஜ்ராயுதத்துடன் நதிகளுக்கு குறுக்கே படுத்திருந்த மலைகளின் இறக்கைகளை உடைத்தாரா, கிருஷ்ணன் காலியமர்த்தனம் செய்தார் என்று புராணகதைகளை சுட்டிக்காட்டியது சரியா? இரும்பு தாதுகள் மத்திய இந்தியாவில் நிறைந்திருக்கையில், இரும்பு தாதுவே இல்லாத கங்கை சமவெளியில்தான் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது சரியா? விவசாயத்தை ஆரியர்கள் கண்டுபிடித்தனர் என்பது சரியா? இரும்பு கோடாலிகளை பயன்படுத்தி ஆரண்யங்களை வெட்டி, விளைநிலங்களாக்கி, உற்பத்தி உபரியால் நிரந்தர படைகள் பராமரிக்கப்பட்டு சாம்ராஜ்யங்கள் உருவாயின என்பது சரியா? சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான அல்லது அதற்கும் முந்திவையான நாகரிகங்கள் மத்திய இந்தியாவில், கிழக்கு கடற்கறைகளில், தெற்கு பீடபூமியில் இருக்கவில்லையா? அவர்கள் பலவகை விவசாய முறைகளை கொண்டிருக்கவில்லையா? கைவினைப் பொருளுற்பத்தியில் தேர்ச்சிப் பெற்றிருக்கவில்லையா? கடல் வழியே தூர தேசங்களுக்கு வர்த்தக வியாபாரங்களை செய்த அந்த பண்பாடுகளைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் எங்கே? பல பத்தாயிரம் ஆண்டுகள் பழைமையான பண்பாட்டையும் வரலாற்றையும் கொண்ட அந்த தொல்குடிகளைப் பற்றிய ஆய்வுகள் மிக முற்போக்கான வரலாற்றாசிரியர்களும் போதிய அக்கறையுடன் ஏன் மேற்கொள்ளவில்லை? அந்த மறைக்கப்பட்ட வரலாற்று மரபுகளை இன்றும் அடித்தட்டு மக்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் வாழ்க்கை மரபுகளில் தேட முடியுமா? ஆரியத்திற்கு எதிரான அந்த பண்பாட்டு கூறுகளை மறுகட்டமைக்க வேண்டிய தேவை இன்று அவசியமானதாக இல்லையா? சாம்ராஜ்யங்கள், பேரரசர்கள்தான் வரலாறா? பேரரசுகளுக்கு முன் உள்ளூர் மட்டத்திலான நிர்வாக முறைகள், பல வடிவங்களில் இருக்கவில்லையா? பல பிரதேசங்களில் பல பெயர்களில் இருந்துவந்த அந்த சமூக அமைப்புகளின் நிர்வாக முறைகளைப் பற்றி போதிய ஆய்வுகள் ஏன் இல்லை? பேரரசர் அசோகர் கலிங்கத்தில் யாரை எதிர்த்து போரிட்டார்? லட்சக்கணக்கான இராணுவத்தை எதிர்த்து போரிட்ட அந்த படை திரட்டுதலுக்கு அடிப்படையாக இருந்த கூட்டமைப்பு எது? கிழக்கு கடற்கரைகளில் சரக்குகள் எற்றுமதியுடன் செழிப்பான துறைமுக நகரங்களை கொண்டிருந்ததும், அவற்றைக் கைப்பற்றுவதும்தான் கலிங்க போர் உள்ளிட்ட பல போர்களுக்கு காரணமாக இருந்ததா? வரலாற்று பதிவுகளில் மறைக்கப்பட்ட அந்த சமூகங்களின் தத்துவங்கள் என்ன? சனாதன தத்துவம் என்று சொல்லப்படுபவைகளுக்கு முந்தைய, பவுத்த, சமணம் போன்றவைகளுக்கு அடிப்படையாக இருந்த பல தத்துவங்கள் இருக்கவில்லையா? அவற்றைப் பற்றிய ஆய்வுகள் ஏன் இல்லை? வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த தொல்குடி சமூகங்களின் எச்சங்களாக இருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் அந்த தத்துவ தடயங்கள் இருக்கவில்லையா? வடகிழக்கு, கிழக்கு, மத்திய இந்திய, தெற்கு பீடபூமி எங்கும் தொன்மையானதும், பல பண்பாடுகளுக்கு அடிப்படையானதுமான திராவிடம் இன்றும் நீடித்து வரவில்லையா? அதை சித்தாந்தமாக கட்டமைத்து நிறுத்தும் ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டாமா?

Reviews
There are no reviews yet.